Tuesday, December 25, 2007

இஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால சிந்தனைகள் (அ.அஸ்மின்)

இஸ்லாமிய அரசியலின் புதிய பணி

21ம் நூற்றாண்டு இஸ்லாத்திற்குறியது என்ற கருத்து எவ்வளவு நிஜமானது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலவே குறித்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (2001-9-11) அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மேற்கொண்ட நயவஞ்சகத்தனமான தாக்குதல் நடத்தையும் அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில் அதன் நேசநாடுகளும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக மேற்கொண்ட வன்மப்பாய்ச்சலும், ஒஸாமா பின்லேடன் என்னும் இஸ்லாமிய உலகில் அதிகம் அறிமுகமில்லாத, இஸ்லாமிய சிந்தனைமிக்க அறிஞர்வரிசையில் இல்லாத ஒருவரை இஸ்லாத்தின் முதன்மை முகவரியாகக்காட்ட முற்பட்ட முய்ற்சிகளும்: இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகப்பாரிய வெற்றியும், வாய்ப்பும் என்றே கொள்ள வேண்டியுள்ளது, எனெனில் இஸ்லாத்தினது உண்மையான முகவரி அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சுட்டிக்காட்டிய தீவிரவாதமும், தீவிரவாதிகளுமல்ல.

இத்தகைய நயவஞ்சகமான தாக்குதலைத்தொடர்ந்து, உண்மையான இஸ்லாத்தையும் அதன் முகவரியையும் தேடும் முயற்சிகள் பலதரப்பினரிடமிருந்தும் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகச்சரியான சந்தர்ப்பம், இஸ்லாத்தின் மிகச்சரியான அடையாளத்தையும் அதன் முகவரியையும் உலகிற்கு காட்டும் பொருப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்க்கும், அறிஞர்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் இப்போது பரவலாக மேற்கொள்ள்ப்படுகின்றன. இஸ்லாமியசிந்தனை உலகிற்கு எடுத்துச்சொல்லப்படுவதற்கான மிகச்சரியான தருணம் இதுவே.

"20ம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் செம்படை, ஆயுதப்பலத்தினால் தோற்கடிக்கப்படவில்லை, மேற்கு கையாண்ட அறிவியல், இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணமாகின: 21ம் நூற்றாண்டில் மிகஜாம்பாவானான தோற்றப்பாட்டுடன், அதி நவீன ஆயுததள்பாடங்களுடன் இஸ்லாமிய உலகுக்கு முன்னால் நிற்கின்ற அமெரிகாவும அதன் நேச நாடுகளும் ஆயுதத்தால் தோற்கடிக்கப்பட முடியும் என எதிர்பார்க்க முடியாது, மாற்றமாக சிந்தனைப்போராட்டமும் இராஜதந்திர யுத்தமுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியைப்பெற்றுத்தரும், எனவே இத்தகய ஒரு பாரிய மாற்றத்திற்கு மிக அடிப்படையாக இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு மாற்றம் யாதெனில்; இஸ்லமிய அரசியலில் மேற்கொள்ளப்படவேண்டிய சிந்தனைப்புரட்சியாகும்,

அறபு தேசியவாதாமாயினும், குழுவாதங்களாயினும் இப்போது அவை எமக்கு உதவப்போவதில்லை, எமது சமூகத்தில் அரசியல் தீவிரவாத கருத்துக்களும் ஆயுதவிரும்பிகளும் இல்லை என்பதற்கில்லை எனவே முதற்கண் நாம் இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டும் எமது அரசியல் கருத்துப்பறிமாற்றங்கள் எம்மை வலுப்படுத்தும், எமக்கிடையிலும் பிறமதத்தவரிகளிடையேயும் இஸ்லாமிய அரசியல் குறித்த நல்ல பதிவுகளை அவை ஏற்படுத்தும்,
இக்கருத்தை மொரொகேவின் பின்ஸயீத், சிரியாவின் முஹம்மத் சஹாஹ்ரி, துருக்கியின் பத்ஹுல்லாஹ் குல், ஈரானின் மு.கதாமி இந்தோனேசியாவின் நூர் மாஜித் ஆகிய அறிஞர்களும் கொண்டுள்ளனர்.

Islamic Political Ethics: Civil Society, Pluralism, and Conflict
Edited by Sohail H. Hashmi With a foreword by Jack Miles

எனவே இலங்கையின் முஸ்லிம் அரசியலிலும் இத்தகைய ஒரு பரந்தசிந்தனைத்தளம் பின்னணியாக இருப்பது, அதன் தெளிவானதும் இஸ்லாமிய சிந்தனைசார்ந்த செயற்பாட்டிற்கும் உருதுணையாக அமையும். இனப்பிரச்சினை என்கின்ற புற்று நோயினாலும், யுத்தினால் வாழ்க்கை நடாத்தும் அரசியல் வாதிகளினாலும் அழிவை நோக்கிப்போகும் இலங்கை போன்ற ஒரு தேசம், இஸ்லாத்தின் சரியான வடிவத்தை தெரிந்துகொள்தல் என்பது பல வழிகளில் எமக்கு துணைபோகக்கூடியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அரசியலில் இத்தகைய ஒரு பரந்த பார்வை காணப்படவில்லை, என்கின்ற அதேவேளை இனவாதம் என்ற குருட்டு சித்தாந்தம் அதன் அடிப்படையாக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இனத்துவ சிந்தனைகளுடன் இரண்டரக்கலந்து விட்டதாயினும் அது தவறானதும் மோசமான பின்விளைவுகளைக்கொண்டதுமாகும், எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது இனவாததின் மீது ஏற்படுத்தப்படலாகாது. அது மனிதநலன், அபிவிருத்தி, சமாதனம் என்கின்ற உன்னதமான அடிப்படைகளில் நிறுவப்படவேண்டும், இத்தகைய ஒரு (Paradigm Shift) மனப்பாங்கு மாற்றமொன்று அவசரமானதும் அத்தியாவசியமானதுமாகும்.

இஸ்லாமியா அரசியலும்- தாராண்மைவாதமும்

தாராண்மை வாதம் (
Liberalism) மேற்குலகில் அதன் மோசமான பதிவுகளை வெளிப்படுத்ததொடங்கியிருக்கும் சமகாலத்தில் இஸ்லாமிய உலகினுள்ளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துவருகின்றது, குறிப்பாக நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே அது ஆதிக்கம் செலுத்திவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. நவீன வழிமுறைகளில் மிகக்குறுகிய சித்தாந்தங்களில் வெளியே வந்து முற்போக்காக எமது செயற்பாடுகளில் நாம் ஈடுபடுதல் என்பது தாராண்மைவாததினை ஏற்றுக்கொண்டு எல்லா தளங்களிலும் நாம் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவதைக்குறிக்காது. மாற்றமாக எமது சுயம் தொலக்காமலும் அடிப்படைச்சிந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாத வண்ணம் எமது செயற்பாடுகளை சமகால உலக் ஒழுங்கின் நிலைமகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நிலையே எம்மிடம் வரவேற்கப்படவேண்டும். இங்கு தாரண்மைவாதத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான பிரிகோடு மிகத்தெளிவாக வரையப்படுதல் வேண்டும்.

சமகால இஸ்லாமிய அறிஞர் வரிசையில் மிகவும் இளையவரான (Tharik Ramadhan) தாரிக் ரமழான் (இமாம் ஹஸன் அல் பன்னாவின் பேரன், சயீத் ரமழானின் புதல்வன்) எழுதிய To Be a European Muslim ஏன்ற நூலில் இதுகுறித்துப்பேசியுள்ளார். பொதுவாக மேற்கிலிருந்து வரும் இஸ்லாமிய அறிஞர்களிடையே இத்தகைய ஒரு எச்சரிக்கையான தன்மை அவசியப்படுவதாய் அவர் உணருகின்றார்
பள்ளிக்கூடங்களில் தாராண்மைவத்ததை மையபடுத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதற்கு உள்ள உரிமை, ஒரு மார்க்கத்தின்பால் அல்லது சிந்தனையின்பால நாட்டம் கொண்ட ஒருவர் தனது குழ்ந்தைக்கும் அதன் அடிப்படைகளை வழங்க நினைப்பதும் அதற்கு முயற்சிப்பதும் ஒன்றும் குழ்ந்தைகளின் உரிமைகளை மீறும் செயலாகாது, எனெனில் தாராண்மைவாதத்தை வலுக்கட்டாயமாக சிறுவர்களிடம் பதிக்கும் முயற்சியும்
ஒருவிதத்தில் உரிமை மீறலே அதாவது அவர்களது மார்க்கம் குறித்த அடிப்படைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் உரிமையினை மீறுவதாகும். எனவே இங்கு தாராண்மைவாதம் என்பது நாம் எமது குழந்தைகளுக்கு மார்க்கம் பற்றிய அறிவை வளங்காமலிருப்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமானவர்கள்: குழந்தைக்கு தேவையான எல்லா கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுபோலவே அவர்களுக்கும் மார்ர்க்கத்தின் அடிப்படைகளும் சொல்லித்தரப்படும். எனவே தாரண்மைவாதம் எமக்குள் உள்வாங்கப்படமாட்டாது.

இதுவே எமது அரசியலிலும், எமது எல்லா நடத்தைகளிலும் தாக்கம் செலுத்தவேண்டும்.

எல்லாத்தரப்பினர்க்கும் தகுந்த இடம் சம காலத்தில்
வழங்கப்படுதல் வேண்டும்

இஸ்லாமிய அரசியல் என்பது அதன் ஆரம்பம் தொட்டே எல்லா தரப்பினர்க்கும் உரிய வாய்ப்பளிக்கப்படவேண்டிய பகுதியாகும். இங்கு எல்லாத்தரப்பினர் என்று நான் குறிப்பிடுவது ஆண்களைப்போலவே பெண்களுக்கும் வாலிபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் எமது முயற்சிகளில் அவர்கள் எப்படி பங்கேற்கமுடியாது போகுமே அவ்வாறே எமது வரலாற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாதூ போகும். சமகால இஸ்லாமிய உலகில் வாலிபர்கள் மற்றும் பெண்களின் கனிசமான பங்களிப்பு காணப்படுகின்றது, எம் சமூகத்தின் இயல்பான குறுகிய சிந்தனைப்போக்கில் பெண்களுக்கும் வாலிபர்களுக்குமான இடம் நீண்டகாலமாகவே சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் எமது அரசியல் முயற்சியிலும் இதுவே மீட்டப்படுமாயின் அது எம்மை பல விதங்களில் பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர்களது ஈடுபாடு அத்தியாவசியப்படுகின்ற சூழலில் எம்மிடம் தகுந்த அனுபவமும் ஆற்றலும் உள்ள மனித வளப்பற்றாக்குறை நிறையவே தோன்றியிருக்கும். எனவே இது எம்மிடம் மீண்டும் மீண்டும் மீட்டப்படாதிருக்க இப்போது முதல் எல்லாத்தரப்பினர்க்கும் உரிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்


No comments: